தமிழ்நாட்டில்.. 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்.. பிப். 24ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்

Manjula Devi
Feb 12, 2025,11:04 AM IST

சென்னை: ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகம் திட்டம் பிப்ரவரி 24 முதல் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


திமுக சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களையும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இதில் விவசாயிகளுக்கு மானியம், கடன் தள்ளுபடி, இலவச பேருந்து, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், என பல்வேறு திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன. 


குறிப்பாக நடமாடும் மருத்துவமனை திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொலைதூரத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு சென்று நோய் தொற்றுகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சேவை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு  நடமாடும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதால் கிராமப்புற மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். 




அந்த வரிசையில் ஜனவரி 26ஆம் தேதி சுதந்திர தின விழா அன்று பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில்  குறைந்த விலையில் மருந்துகளை வழங்கிட முதல்வர் மருந்தகம் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 24ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். மருந்து, மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்க தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 33 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.