அன்போடு கேட்டுக்கிறேன்.. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்க.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Meenakshi
Oct 21, 2024,05:57 PM IST

சென்னை: சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விழாவில் அவர் பேசும்போது குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டார்.


இந்த விழாவில் புதிதாக திருமணம் செய்த கொண்ட மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.


தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தாலி எடுத்து கொடுத்து ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இந்து அறநிலையத்துறை சார்பில் மணப்பெண்ணிற்கு 4 கிராம் எடையுள்ள தங்கத்தாலி. கட்டில், மெத்தை, பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது. புதுமணத்தம்பதிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 


அதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:




பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. பதினாறு செல்வங்கள் என்பது மாடு,மனை, மனைவி, மக்கள்,கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது,வாகனம், பொன், பொருள், பெயர்,புகழ் என பதினாறு செல்வங்கள் பெற்று வாழுங்கள் என்று முன்னர் எல்லாம் சொல்வார்கள். தற்போதைய காலத்தில் அளவோடு பெற்று வளமாக வாழுங்கள் என்று சொல்கிறார்கள். மணமக்களுக்கு அன்போடு கேட்டு கொள்வது என்னவென்றால், உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று தான். 


திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவில் வல்லுநர் குழு அமைத்தோம். மூன்று ஆண்டுகளில் 2,226 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தியுள்ளோம். 10,238 கோயில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 9,000 கோயில்களில் பணி நடைபெற்று வருகின்றன. நன்கொடையாளர்கள் அளித்த ரூபாய் 1,103 கோடியை கொண்டு 9,163 கோயில்களில் திருப்பணி நடைபெற்று வருகின்றது.


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 6792 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டுள்ளோம். 17,000 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் தான் செயல்படுத்தப்பட்டது. ஒன்பது கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 720 கோயில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூபாய் 257 கோடி மதிப்புள்ள 442 கிலோ சுத்த தங்கம் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 5 கோடி வருவாய் கிடைக்கிறது.




அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை திமுக அரசு தான் செயல்படுத்தியது. சிதம்பரம் கோயில் கனக சபை மீது ஏறி தரிசிக்கும் உரிமையை நிலைநாட்டும் தீர்ப்பை பெற்றதால் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 1000 ஆண்டு பழமையான கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1000 ஆண்டு பழமையான 2724 கோயில்களில் ரூபாய் 426.62 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ஊர் கோயில்கள் தொடர்பாக வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். கோயில்கள் தொடர்பான திமுக அரசியல் நடவடிக்கைகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அரசை விமர்சிக்கின்றனர். பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்துபவர்களால் திமுக அரசின் நடவடிக்கைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர்கின்றனர். 


பராசக்தி திரைப்படத்தில் ஒரு வசனம் இருக்கிறது. கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்