கனவு நனவானது.. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Meenakshi
Aug 17, 2024,07:56 PM IST

சென்னை: அத்திக்கடவு அவிநாசி கனவு திட்டத்தை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றில் இருந்து வெளியேறும் 2000 கன அடி வெள்ள உபரி நீரை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளின்  நீர் நிலைகளில் நிரப்பி பயன்படுத்தப்படுவதற்காக கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக விவசாயம் குடிநீர்  தேவைகளை பூர்த்தி செய்வது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் நீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.




2018 ஆம் ஆண்டு ரூபாய் 250 கோடி ஒதுக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது ரூபாய் 1,916 கோடி செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள 145 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் எனவும், சுமார் 50 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 1,916 கோடியில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர் நிலைகள் நிரப்பப்பட்டு 24,468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். 


அத்திக்கடவு அவிநாசி திட்டம் 65 ஆண்டுகளுக்கு மேலாக கனவாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காலை 10 மணி அளவில் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இது தொடங்கப்பட்டிருப்பது இப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்