தீவிர உடற்பயிற்சி.. திடீரென மயங்கி விழுந்து பலி.. 24 வயதுதான்.. அதிர வைத்த டாக்டர் அன்விதா!

Su.tha Arivalagan
Nov 24, 2023,05:11 PM IST

சென்னை: சென்னையில் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வந்த டாக்டர் அன்விதா என்பவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்துபோதே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.


ஜிம்முகளில் உடற்பயிற்சி செய்யும்போது சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன. இந்த திடீர் மரணங்களுக்கு என்ன காரணம் என்பது இதுவரை தெளிவாக சொல்லப்படவில்லை. ஆனால் மரணங்கள் தொடர் கதையாகி வருகின்றன.


உத்தரப் பிரதேசத்தில் ஒரு கல்லூரி மாணவர் டிரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல ஆந்திராவில் நடந்தது.. ஏன் சென்னையிலும் கூட நடந்தது. இப்போது ஒரு பெண் டாக்டர் இதுபோல மரணமடைந்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்.




அந்த இளம் பெண் டாக்டரின் பெயர் அன்விதா. 24 வயதுதான் ஆகிறது. தனியார்ர மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக ஜிம்முக்குப் போய் வந்தது. வழக்கம் போல அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அன்விதாவுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளது தெரிய வந்தது. 


மரணமடைந்த அன்விதா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்தவர். இவரது தந்தை சென்னை நகரின் பிரபலமான கண் மருத்துவர் ஆவார்.   அன்விதா உடற்பயிற்சிக்குப் போய் வந்த ஜிம் கீழ்ப்பாக்கம் புது ஆவடி சாலையில் உள்ளது. இங்குதான் அவர் தினசரி தீவிர உடற்பயிற்சி செய்து வந்தார். 


இந்தியாவில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து சமீபத்தில் ஐசிஎம்ஆர் விளக்கம் தெரிவித்திருந்தது. அதில் கொரோனா பாதிப்புக்குப் பின்னர் இதுபோன்ற மாரடைப்புகள் அதிகரித்திருப்பதாக அது தெரிவித்திருந்தது. ஆனால் கொரோனா வாக்சின் இதற்குக் காரணம் அல்ல என்றும் கொரோனா பாதிப்பு, வாழ்க்கை முறை மாற்றம், உடலில் உள்ள பிற பாதிப்புகள் காரணமாக இருக்கலாம் என்று அது விளக்கியிருந்தது.