சென்னை டிராபிக் ஜாமை தீர்க்க.. கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகரில் பாலங்கள்

Su.tha Arivalagan
Mar 09, 2023,10:26 AM IST
சென்னை:  பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் தலைநகர் சென்னையின் போக்குவரத்து சிக்கலை சற்று தளர்த்தும் வகையில் 3 புதிய பாலங்கள் கட்டப்படவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். விழாவில் அமைச்சர்கள் கே. என். நேரு, பி.கே.சேகர்பாபு,  மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளில் இந்த பாலங்கள் கட்டப்படவுள்ளன. மொத்தம் ரூ. 369 கோடி மதிப்பில் பாலங்கள் கட்டப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டு எண் 45 மற்றும் 70ல் வரும் கணேசபுரம் சப்வே மீது ஒரு பாலம் கட்டப்படவுள்ளது. இந்தப் பாலமானது ரூ. 142 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.  இந்த பாலம் வந்தால் 2 லட்சம் பேருக்கு பலன் கிடைக்கும்.  இப்பகுதியில் தினசரி 40,000 வாகனங்கள் சென்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் பாலம் தேவை என்று  பெரம்பூர், ஆர்.கே.நகர் பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று இந்தப் பாலம் கட்டப்படவுள்ளது.

அதேபோல தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட மணலி சாலை ரயில்வே சந்திப்��ில் ஒரு பாலம் வருகிறது. இதை 2 வருடங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தப் பாலம் வந்தால் கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேருக்கு பலன் கிடைக்கும்.

அதேபோல உஸ்மான் சாலை -சிஐடி நகர் மெயின் ரோடு பகுதியை இணைக்க புதிய பாலம் கட்டப்படவுள்ளது. ரூ. 131 கோடியில் இது கட்டப்படும். இந்தப் பாலம் வந்தால் தி.நகர்   பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.