ரோஹித் சர்மாவை வாங்கப் போகிறதா சிஎஸ்கே?.. ஆனால் காசி விஸ்வநாதன் இப்படி சொல்றாரே!

Su.tha Arivalagan
Dec 20, 2023,02:52 PM IST

சென்னை: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா உள்ளிட்ட சில முக்கிய மும்பை இந்தியன்ஸ் வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளை அந்த அணியின் தலைமை செயலதிகாரி காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார்.


அப்படி செய்வதில்லை என்பதை பாலிசியாகவே வைத்துள்ளோம். மும்பை இந்தியன்ஸ் வீரர்களை டிரேட் செய்யும் திட்டத்திலும் நாங்கள் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


சமீபத்தில்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்து சேர்ந்தார் ஹர்டிக் பாண்ட்யா. வந்த வேகத்தில் அவரை கேப்டனாக அறிவித்தது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். இது ரோஹித் சர்மா தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதெல்லாம் நியாயமே இல்லை என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியை அன் பாலோ செய்தனர்.




இந்த நிலையில் ரோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரப் போகிறார் என்று செய்திகள் பரவின. முன்னாள் வீரர்கள் சிலரும் கூட மஞ்சள் நிற ஜெர்சியில் ரோஹித் சர்மா படத்தை ஷேர் செய்ய ஆரம்பித்தனர். இதனால் சந்தேகம் வலுவடைந்து வந்தது. தற்போது வதந்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது. அதாவது ரோஹித் சர்மா மட்டும் வரலையாம், கூடவே சூர்ய குமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரும் கூட வருகிறார்களாம் என்று செய்திகள் பரவி வருகின்றன.


இதுகுறித்து கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,  பிற அணிகளிலிருந்து வீரர்களை டிரேட் செய்வதில்லை என்பதை பாலிசியாகவே வைத்துள்ளோம். அதில் மாற்றம் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணி குறித்த செய்திகளுக்கும் அது பொருந்தும். அவர்களை அணுகவும் இல்லை,  அப்படி எந்த திட்டமும் இல்லை என்றார் அவர்.


அவர் இப்படிச் சொன்னாலும் கூட வதந்திகள் ஓய்வதாகத் தெரியவில்லை. நிச்சயம் ரோஹித் சர்மா சென்னை அணிக்கு வருவார்.. அது நிச்சயம் என்று பலரும் சூடம் ஏற்றாத குறையாக அடித்துச் சொல்லி வருகிறார்கள்.