ஒரே ஒரு மழைதான்.. மொத்தமாக மிதக்கும் சென்னை புறநகர்கள்.. எங்கெங்கும் வெள்ளக்காடு!

Su.tha Arivalagan
Nov 29, 2023,05:49 PM IST
சென்னை: இன்று காலை சென்னைப் புறநகர்ப் பகுதிகளை திடீர் பலத்த மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது புறநகர்கள் பலவும் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்பட பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்து விட்டது.

இன்று காலை திடீரென பலத்த மழை கொட்டித் தீர்த்தது. வழக்கமாக சென்னை நகரில் வெள்ளக்காடாகும். இந்த முறை சென்னை தப்பியுள்ளது. மாறாக புறநகர்ப் பகுதிகள் பலவும் வெள்ளக்காடாகியுள்ளன. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளது.



பெரும்பாலான இடங்களில் கால்வாய் அடைப்புகள் சரிவர எடுக்கப்படாமல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. அதேபோல ஏரிகளின் போக்குக் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக பல பகுதிகள் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீடியோ: மழை நீரில் மிதக்கும் சென்னை அஸ்தினாபுரம் திருமலை நகர்

சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரம் பகுதியில் பல தெருக்கள், சாலைகளில் நீர் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது. இங்குள்ள போக்குகால்வாய் பல காலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற எத்தனையோ முறை மக்கள் கோரிக்கை விடுத்தும் அதற்கு விமோச்சனம் பிறக்கவில்லை. அரசியல் அழுத்தங்கள், நெருக்கடிகளே இந்த நிலைக்குக் காரணம். இதன் விளைவு இந்த நகரின் ஒரு பகுதி மக்கள் காலம் காலமாக மழைக்காலங்களில் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக 10வது தெரு, 12, 13, 14, 15 என ஏரிக்குச் செல்லும் பகுதியில் உள்ள தெருக்கள் எல்லாம் நீரில் மூழ்கிக் கிடக்கும் அவலம் தொடர்கதையாக உள்ளது.



சமீபத்தில்தான் இந்தப் பகுதியில் புதிதாக மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முழு பலனும் கிடைக்கவில்லை. காரணம், மழைக்காலத்தை ஒட்டித்தான் இதைப் போட்டார்கள். இன்னும் இந்தப் பணி முடியவில்லை. இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலனும் கிடைக்கவில்லை. திருமலை நகரின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்திருப்பதாலும், தண்ணீர் சாக்கடை கலந்து வருவதாலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிங்காரச் சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் தேங்கிருக்கா பாருங்க என்று திமுக அரசு பெருமிதம் கொள்கிறது.. அதே போல சென்னைப் புறநகர்களிலும் அது சிறப்பாக செயல்பட்டால்தான் அவர்களது பெருமிதமும், சாதனையும் முழுமை பெறும். காரணம் இந்தப் பகுதிகளிலும் கூட திமுகவினரே எம்.எல்ஏக்களாக, அமைச்சராக உள்ளனர்.



இதேபோல ஜிஎஸ்டி சாலை நெடுகிலும் பல இடங்களில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியதால் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையப் பகுதி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.