"சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா" .. இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Manjula Devi
Jan 13, 2024,02:56 PM IST

சென்னை: "சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா" நிகழ்ச்சியை சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


மறைந்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிதான் சென்னை சங்கமம். திமுக எம்.பி. கனிமொழியின் கற்பனையில் உதித்த கலை கலாச்சார நிகழ்வு இது. பொங்கல் சமயத்தில் இது நடத்தப்பட்டு வந்தது. அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 வருடம் சென்னை சங்கமம் நடைபெறவில்லை.


தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மறுபடியும் இது நடைபெற ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டு, 

இந்த கலை நிகழ்ச்சி மொத்தம் 18 இடங்களில், 4 நாட்கள் அதாவது இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.




தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர். இந்த பொங்கல் விழாவை ஒவ்வொரு ஊர்களிலும் அவர்களின் பாரம்பரிய முறைப்படி நடத்தப்படுவது வழக்கம். பொங்கல் விழாவை ஒட்டி தொடர் விடுமுறை என்பதால் மக்கள் சொந்த ஊருக்குச் சென்று பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருவர்.


கடந்த 2007 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக, சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதற்கு மக்கள் பெரும் வரவேற்பை  கொடுத்தனர். இதனை தொடர்ந்து 2011 அதிமுக  ஆட்சியில் இந்த கலை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு  திமுக ஆட்சியில் மீண்டும் சென்னை சங்கமம் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.




மேலும் 2023- 24 நிதியாண்டு நிதிநிலை ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை சங்கமம் கலை விழா நிகழ்ச்சி விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, வேலூர், தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் சங்கமம் விழா நடந்த 9.90  கோடி செலவில் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.


2024 ஆம் ஆண்டுக்கான சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தீவுத்திடலில் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் இந்த கலை விழா கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. இதில் 1500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். இந்நிகழ்வினை முதல்வர் ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.


இந்த கலை நிகழ்ச்சிகள் சென்னையில் 18 இடங்களில், 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ள இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி நிகழ்ச்சிக்காக நாட்டுப்புற கலைஞர்கள் நேற்று ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனை திமுக துணை பொது செயலாளர் கனிமொழி பார்வையிட்டார். பின்னர் கலைஞர்கள் பயன்படுத்தும் மேளத்தை வாங்கி வாசித்தார். அவர்களுடன் இணைந்து உரையாடி மகிழ்ந்தார்.