பெட்ரோல் குண்டு வீசிய.. ரவுடி கருக்கா வினோத்.. 3  நாள் போலீஸ் காவல்

Su.tha Arivalagan
Oct 30, 2023,03:38 PM IST

சென்னை: ஆளுநர் மாளிகையான ராஜ்பவன்  முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை கோர்ட் அனுமதி அளித்துள்ளது.


ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக கடந்த புதன்கிழமை ரவுடி கருக்கா வினோத்தை கிண்டி போலீசார் கைது செய்தனர் .இவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர். பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தின் பின்னணியில் வேறு யாரும்  இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இது நாச வேலைக்கான சதி என்றும் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பான காவல்துறை நடவடிக்கை குறித்தும் ஆளுநர் மாளிகை அதிருப்தி வெளியிட்டிருந்தது.




இருப்பினும், ஆளுநர் மாளிகையின் புகார் தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோ காட்சிகளுடன் காவல்துறை  அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளதாகவும் காவல்துறை ஆணையர் சந்தீப் ராத்தோர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று ரவுடி கருக்கா வினோத்தை, சென்னை சைதாப்பேட்டை, 9வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை காவலில் எடுக்க போலீஸ் தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த நீதிபதி, 3 நாள் காவலில் கருக்கா வினோத்தை அனுமதித்து உத்தரவிட்டார்.


அவரிடம் நடக்கப்போகும் விசாரணையில்தான் யார் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவத்தை வினோத் நடத்தினார் என்பது தெரிய வரும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜகவின் மாநில தலைமையிடமான கமலாலயத்தில் இதே கருக்கா வினோத்தான் பெட்ரோல் குண்டு  வீசி கைதானார். இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் பெட்ரோல் குண்டு வீசியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் எனவும் தேனாம்பேட்டை டாஸ்மாக் கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசினார். இதை தவிர்த்து  இவர் மீது இரண்டு கொலை வழக்குகளும், இரண்டு அடிதடி வழக்குகளும் என மொத்தம் ஒன்பது வழக்குகள்  உள்ளது. 


ராஜ்பவன் குண்டு வீச்சின்போதே அவர் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று கோஷிமிட்டபடிதான் குண்டு வீசினார். போலீஸாரிடம் அதே கோரிக்கையைத்தான் வலியுறுத்தியிருந்தார். இன்று கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோதும் அதே கோஷத்தைத்தான் எழுப்பினார் என்பது நினைவிருக்கலாம்.