சென்னைக்கு இன்றும் பலத்த மழை காத்திருக்கு.. தயாராகுங்கள் மக்களே!

Manjula Devi
Jun 19, 2024,11:03 AM IST

சென்னை: சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை நீடித்து வரும்  நிலையில், இன்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.




தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.  சென்னையில் நேற்று முன்தினம்  நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.அதே போல் இரண்டாவது நாளான நேற்றும் திடீரென கரு மேகங்கள் ஒன்று கூடி பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை புரட்டிப் போட்டது. குறிப்பாக கிரீன்வேஸ் சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம், மற்றும் சென்னை புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தவிர விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.


தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை மழை தொடரும் எனவும்,  மாலை, இரவு நேரங்களில் சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,  ஜூன் மாதத்தில் சராசரியாக 55 முதல் 60 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடும்.ஆனால் தற்போது இயல்பை விட அதிகமாக 4 முதல் 5 மடங்கு மழை பெய்து வருகிறது. இந்த ஜூன் மாதத்தில் இதுவரை 10 நாட்களில் அதிக மழை பெய்துள்ள நிலையில் இன்னும் வரும் நாட்களில் இதுபோல மழையை எதிர்பார்க்கலாம்.  சென்னை நகர்ப்புற பகுதியில் 189.8 மில்லி மீட்டர் மழையும், புறநகர் பகுதிகளில் 241.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


சென்னையில் கடந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் புயல் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.