மீண்டும் நனைந்த சென்னையில்.. அடுத்த 2 மணி நேரத்திற்கு.. லேசான மழைக்கு வாய்ப்பு!

Manjula Devi
Oct 18, 2024,10:11 AM IST

சென்னை:  சென்னையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி தொடங்கியும், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் அரசு சார்பாக பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஒரே நாளில் தண்ணீர் முழுவதும் வடிந்தது.




இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா பகுதிகளில் கரையைக் கடந்த பின்னர் சென்னையில் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து நேற்று பகலில் வெயில் சுளீரென அடித்தது.  இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் இன்று அதிகாலை முதல் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும்  பெய்துள்ளது.


குறிப்பாக பட்டினப்பாக்கம், அடையாறு, அண்ணா சாலை, திருவான்மியூர், மடிப்பாக்கம் தரமணி மந்தவெளி, மெரினா கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் தற்போது மிதமான மழை பெய்துள்ளது. 


அடுத்த 2 மணி நேரத்தில்


இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் சென்னைக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட கிழக்கு பருவமழை காலகட்டமான அக்டோபர், நவம்பர், மற்றும் டிசம்பர்,  மாதங்களில் எதிர்பார்க்கப்படும் வழக்கமான மழைதான் இது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த அதிமழை காரணமாக சென்னை முழுவதும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இந்த தண்ணீரை அகற்ற தூய்மை பணியாளர்கள் தங்கள் சேவைகளை சிறப்பாக வழங்கி ஒரே நாளில் தேங்கிய நீரை அகற்ற தங்களின் பங்களிப்பை  வழங்கி இருந்தனர். இதற்காக தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த விருந்தில் முதல்வர் மு க ஸ்டாலினும்  தூய்மை பணியாளர்களுடன் இணைந்து உணவருந்தினார். இதனைத் தொடர்ந்து எந்த மழை வந்தாலும் அரசு சந்திக்க தயார் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்