ரவுடி திருவேங்கடம் ஏன் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.. சென்னை போலீஸ் விளக்கம்

Su.tha Arivalagan
Jul 14, 2024,03:59 PM IST

சென்னை:  ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் ஏன் நடந்தது, ஏன் அவர் கொல்லப்பட்டார் என்பது குறித்து சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.


இன்று அதிகாலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்பவரை மதுரவாயல் அருகே வைத்து போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த என்கவுண்டர் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.




இந்த நிலையில் திருவேங்கடம் என்கவுன்டர் குறித்து சென்னை காவல்துறை விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


கடந்த 5.7.2024 அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கே1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குன்றத்துரைச் சேர்ந்த திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்படி கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இவர் மேற்கொண்ட கொலை வழக்கு தவிர மேலும் 2 கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். 


அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று 14/7/2024 தேதி அதிகாலை போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்ற எதிரி தங்கி இருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அவ்வாறு அழைத்துச் செல்லும்போது இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டுமந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்திய போது பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு எதிரி தப்பி ஓடிவிட்டார். உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை.


புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த எதிரி திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்த போது எதிரி தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். உடனடியாக காவல் ஆய்வாளர் எதிரி திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த எதிரி உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இது சம்பந்தமாக எம்3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்துறை விளக்கம் அளித்தள்ளது.