வீட்டு பணியாளரை தாக்கியதாக புகார்.. நடிகை பார்வதி நாயருக்கு சிக்கல்.. போலீஸ் வழக்கு

Manjula Devi
Sep 21, 2024,12:17 PM IST

சென்னை:   வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி நாயர்.  தொடர்ந்து உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பார்வதி நாயர்.




சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள, விலையுயர்ந்த பொருட்களான கைக்கடிகாரம், லேப்டாப், வாட்ச் போன்றவை திருட்டுப் போனதாக  புகார் அளித்திருந்தார். மேலும் தன் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் மீது சந்தேகம் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.


இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே சுபாஷ்  நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர்,  தன்னை தாக்கியதாக புகார் அளித்தார். ஆனால்  இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக சுபாஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். 


அதை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், சுபாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், பார்வதி நாயர், கொடம்பாடி ராஜேஷ், இளங்கோவன் செந்தில், அருள்முருகன், அஜித் பாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி மேற்கண்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்