சென்னையில் அதிகாலையில் என்கவுண்டர்.. 2  ரவுடிகள் சுட்டுக் கொலை

Meenakshi
Oct 12, 2023,11:18 AM IST

சென்னை: சென்னை அருகே சோழவரம் பகுதியில் இன்று நடந்த போலீஸ் என்கவுண்டரில், ரவுடி முத்து சரவணன் மற்றும் அவரது நண்பர் சண்டே சதீஷ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.


செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் பார்த்திபன். இவரை ரவுடிகள் கடந்த  மாதம் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் இதுவரை 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.




முக்கிய குற்றவாளி முத்து சரவணன் என்ற பிரபல ரவுடியை போலீசார் தேடி வந்தனர். அவர் திருவள்ளூர் மாவட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்ற போலீசார் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள புதூர் மாரம்பேடி பகுதியில் ரவுடி முத்து சரவணனை பார்த்தனர். முத்து சரவணனுடன் அவரது நண்பர் சண்டே சதீஷ் என்பவரும் இருந்தார். 


இவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடிகள் தரப்பில் போலீஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் போலீசார் நெவிபிரபு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ரவுடிகள் இருவரையும் போலீசார் சுட்டனர். இதில், முத்து சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  சண்டே சதீஷ் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ் அங்கு உயிரிழந்தார். காயமடைந்த போலீசார் 3 பேரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.