சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திடீர் இடமாற்றம்.. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியும் மாற்றம்!

Su.tha Arivalagan
Jul 08, 2024,05:52 PM IST

சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் சென்னை பெரம்பலூரில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். பத்துக்கும் மேற்பட்டோர் வந்து ஆம்ஸ்ட்ராங்கை அவரது வீட்டுக்கு அருகேயே வைத்து வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் இந்தக் கும்பல் போலீஸில் சரணடைந்தனர்.




இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவுத்துறையின் தோல்வியே இந்த சம்பவத்திற்குக் காரணம். ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளின் சதித் திட்டத்தை காவல்துறை முன் கூட்டியே கண்டுபிடித்திருந்தால் கொலையைத் தவிர்த்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது. மேலும் எதிர்க்கட்சிகளும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக விமர்சிக்க ஆரம்பித்தன.


இந்தக் கொலைச் சம்பவத்தின் காரணமாக காவல்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் மீது விமர்சனங்கள் திரும்பி வந்த நிலையில், தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக அரசு நியமித்துள்ளது.


சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.  அருண் தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்து வருகிறார்.


அதேபோல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. டேவிட்சன் தேவாசிர்வாதம் தற்போது தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வருகிறார்.


இந்த நிலையில் இன்று மாலை தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். அதில் டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.