64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

Manjula Devi
Oct 22, 2024,06:23 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் காவல்துறை சார்பில் 64 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஏழு உயர் கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுவது தீபாவளி பண்டிகை தான். சாதாரண ஏழை மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும்  பாரம்பட்சம் இல்லாமல் கொண்டாடுவது இந்த  பண்டிகையைத்தான். ஏனெனில் தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் அனைத்து  மக்களும்  புது துணி வாங்குவது, பலகாரம் மற்றும் பட்டாசுகள்,  வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவது வழக்கம். அதன்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. 




கடைவீதிகள் மற்றும் பட்டாசு கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் குடும்பத்துடன் சென்று புது ஆடைகள், பட்டாசுகள் வாங்க ஆர்வ காட்டி வருகின்றனர். கூட்டமும் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னையில் வார இறுதி நாட்கள் என எப்போதுமே  தியாகராய நகர் பஜார் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும். அதிலும் தற்போது தீபாவளி

பண்டிகையை வருவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதனால் பண்டிகைக்கு நாட்கள் நெருங்கி வருவதால் சொல்லவே வேண்டாம்   கடைவீதிகளை மக்கள் முற்றுகையிட துவங்கி விட்டனர். 


இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மக்களின் பாதுகாப்புக் கருதி அப்பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் விளக்கி கூறியதாவது,  கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரெங்கநாதன் தெருவில்  64 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஏழு கோபுரங்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த 64 கேமராக்களிலும் குற்றவாளிகளை அடையாளம் காணும் தொழில்நுட்பம் உள்ளது. அதேபோல் ட்ரோன் யூனிட் மூலம் கூட்டத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இப்பகுதி மக்களை பாதுகாக்கவும் கண்காணிக்கவும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.


தி.நகர் மட்டுமல்லாமல் புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்சி சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல புறநகர்களிலும் கூட முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் கூட்டம் களை கட்டியிருக்கிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்