மத்தாப்பு சுட்டுச் சுட்டு போடட்டுமா..கடைசி நேரம் வரை காத்திருக்காதீங்க..பர்ச்சேஸை சீக்கிரமே முடிங்க!

Meenakshi
Oct 22, 2024,04:58 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பர்ச்சேஸிங்கில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். பலர் கடைசி நேரம் காத்திருந்து கடைசி நாட்களில் கடைகளில் குவிவதால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க முன்கூட்டியே போய் வாங்க வேண்டியதை வாங்குவது நல்லது.


தீபாவளி பண்டிகை வரும் அக்., 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் மக்கள் புத்தாடை, நகை, பட்டாசுகள் வாங்க அதிகளவில்  கூடும் இடங்களான தியாகராய நகர், ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், பூக்கடை, வண்ணாரப்பேட்டை,புரசைவாக்கம், மயிலாப்பூர் ஆகிய  பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 18,000த்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




கூட்டநெரிசலை கட்டுப்படுத்துதல், குற்றங்களைத் தடுத்தல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகிய 3 முக்கிய நடைமுறைகளைக் கடைபிடித்து, போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டு வருகின்றர். அனைத்து இடங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர் காவல் படை வீரர்கள் என போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


பைனாகுலர் மூலம் கண்காணிக்கும் போலீஸ்


சென்னை நகரின் பல பகுதிகளில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு போலீசார் சுற்று முறையில் நேரடியாக 21 பைனாகுளார்கள் மூலமாக கண்காணித்து குற்ற செயல்கள் நடக்காமல் தடுத்து வருகின்றனர். மேலும், ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு நிகழாமல் தடுக்கும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 


தியாகராய நகர், பாண்டி பஜார் பகுதிகள் பெண்கள் கழுத்தில் உள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்கும் பொருட்டு, கழுத்தில் துணிகளை சுற்றி கவனமாக கட்டிக்கொள்ள பத்தாயிரம் துணி கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் கூடுதலாக 42 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.


தற்காலிகமாக உதவி மையங்கள்


சென்னையில் பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக உதவி மையங்கள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கூட்டத்தில் காணாமல் போகும் சிறர்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தியாகராய நகர் கட்டுப்பாட்டு அறையை 73585-43058 என்ற கைபேசி எண் மூலமாகவும், புரசைவாக்கம் கட்டுப்பாட்டு அறையை 78248-67234 என்று கைப்பேசி எண் மூலமாகவும், பூக்கடை கட்டுப்பாட்டு அறையை 81223-60906 என்ற கைப்பேசி எண் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


வாகனங்கள் செல்ல இயலாத இடங்களிலும, கூட்ட நெரிசல் மிக்க இடங்களும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். போலீசார் பஜார் பகுதிகளில் ஜீப் மற்றும்  இரு சக்கர வாகனங்களில் மூலம் சுற்றி வருகின்றனர்.  கூட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் ஆண் மற்றும் பெண் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஏ.அருள் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.


மக்களே சீக்கிரமா போங்க


மக்களும் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே கடைகளுக்குப் போய் வாங்க வேண்டியதை வாங்குவது நல்லது. கடைசி நேரத்தில் போகும்போது கடும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதால் முன்பே போய் பர்ச்சேஸிங்கை முடிக்கலாம். இப்போதெல்லாம் பெரிய பெரிய நிறுவனங்கள் பல்வேறு இடங்களிலும் கிளைகளை வைத்துள்ளதால் மக்களும் ஒரே இடத்தில் போய் குவியாமல் தங்களுக்குப் பக்கத்திலேயே உள்ள பிடித்தமான கடைகளுக்குப் போகக் கூடிய வாய்ப்பும் கிடைத்து நிம்மதியாக பர்ச்சேஸ் செய்ய முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்