சென்னை மெட்ரோ நிலைய தொழில்நுட்பக் கோளாறு சரியானது.. போக்குவரத்து நார்மல் ஆனது!
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் காலை பீக் அவரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மக்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில் தற்போது பிரச்சினை சரியாகி போக்குவரத்து இயல்பாகியுள்ளது.
சென்னை மாநகரின் மிக முக்கிய போக்குவரத்தாக மாறியுள்ளது மெட்ரோ ரயில். பிற போக்குவரத்தை விட இது சவுகரியமாகவும், எளிமையாகவும் இருப்பதால் மிகப் பெரிய அளவில் மக்கள் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை பீக் அவர் சமயத்தில் கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் மின் கம்பி ஒன்று துண்டிக்கப்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதலில் அரை மணிநேரத்தில் சரி செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் கூட பிரச்சினை சரி செய்யப்படவில்லை.
இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகருக்கு இயக்கப்படும் ரயில்கள் ஆலந்தூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது. அதேசமயம், சென்டிரல் ரயில் நிலையத்துக்கான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
ஆலந்தூர் முதல் விம்கோ நகர் வரை ரயில்கள் இயக்கப்படாததால் மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். காலை நேரம் என்பதால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் கடும் அவஸ்தைக்குள்ளானார்கள். இந்த போக்குவரத்து பாதிப்பு காரணமாக மின்சார ரயில்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.