புயல் மழை வருவதால்.. நாளை மட்டுமல்ல.. டிச. 17ம் தேதியும் மெட்ரோவில் 5 ரூபாய்க்கு பயணிக்கலாம்!

Su.tha Arivalagan
Dec 02, 2023,05:58 PM IST

-  மஞ்சுளா தேவி


சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் நாளை அறிவிக்கப்பட்டிருந்த ரூ. 5 கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற சலுகை, வரும் டிசம்பர் 17ஆம் தேதிக்கும் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை புயல் மழையாக இருக்கும் என்பதால் பயணிகள் வருகை குறைவாக இருககும் என்ற எதிர்பார்ப்பால் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) நாளை ஒரு நாள் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ இரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.




இந்நிலையில்,  வடகிழக்கு பருவமழை காரணமாக நாளை (03.12.2023) கனமழை, புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் அதிகளவில் நாளை (03.12.2023) பயணிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், தவிர்க்க முடியாத காரணத்தினால் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.


மெட்ரோ பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, அதிக பயணிகள் இந்த பிரத்யேக கட்டணத்தில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு ரூ.5 என்ற பயணக்கட்டணத்தில் வருகின்ற 17.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் பயணிகள் பயணிக்கலாம்.


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளது.


தற்போது சென்னை அருகே வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை மறு நாள் புயலாக உருவாகிறது. தமிழக அரசு  புயல் எச்சரிக்கை குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கியும், பாதுகாப்பு குறித்தும் ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.