தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்

Meenakshi
Jul 02, 2024,07:59 PM IST

 சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூலை 7ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் சமீப காலமாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அவ்வப்போது மழை பொழிந்து வெப்பத்தை தடுத்து வருகிறது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை ஜூலை 2ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


திங்கட்கிழமை காலை வரை பதிவான மழை அளவு 




விண்ட் வொர்த் எஸ்டேட், வூட் பிரையர் எஸ்டேட், அவலாஞ்சி, செருமுள்ளி ஆகிய நீலகிரியின் பலெவேறு பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டரிலும், கோயமுத்தூர், நாமக்கல் பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டரிலும், திருவண்ணாமலை, ஈரோடு, வேலூர், காரைக்கால், சேலம், திருவள்ளூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், தேனி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவு மழை பதிவாகியுள்ளது.


வெப்ப நிலை:


தமிழகத்தில் திங்கட்கிழமை தூத்துக்குடியில் 100.04 டிகிரி வெப்பம் பதிவானது. மேலும், செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையையும் ஒட்டியும் ஓரிரு இடங்களில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும்,  குறைந்த பட்ச வெப்பநிலை 27 -28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


இதற்கிடையே மன்னர் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் ஜூன் 2 முதல் 5ஆம் தேதி வரை மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தை காற்று வீச கூடும் என்பதால், மீனவர்கள் இப்ப பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.