கரண்ட் வரலை.. வெள்ளம் வடியலை.. இன்னும் முழுமையாக மீளாமல் இருக்கும் சென்னை.. மக்கள் அதிருப்தி!

Su.tha Arivalagan
Dec 06, 2023,06:54 PM IST

சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பல இடங்கள் இன்னும் முழுமையாக வெள்ளப் பாதிப்பிலிருந்து மீளாமல் உள்ளன. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


பல இடங்களில் இன்னும் கரண்ட் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதேபோல பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியவில்லை என்ற அதிருப்தியும் அதிகரித்துள்ளது.


மிச்சாங் புயல் சென்னையையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் (இவை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வருகிறது) உலுக்கி எடுத்து விட்டுப் போயுள்ளது. மிகப் பெரிய மழையைக் கொட்டிய இந்த புயலால் மாநகரமும், புறநகர்களும் வெள்ளக்காடாகின. 




எங்கு திரும்பினாலும் தண்ணீராக காட்சி அளித்தது சென்னை. கிட்டத்தட்ட 2015ம் ஆண்டு என்ன மாதிரியான வெள்ளத்தை சந்தித்ததோ அதே அளவிலான பாதிப்பை இப்போதும் சந்தித்தது சென்னை 


புயல் விலகிச் சென்ற பின்னர் சென்னையில் வெள்ளம் வடியத் தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து விட்டாலும் கூட சில இடங்களில் இன்னும் முழுமையாக வடியவில்லை என்ற புகார் வந்துள்ளது. அதேபோல பல இடங்களில் இன்னும் மின்சாரம் வரவில்லை என்று மக்கள் புலம்புகிறார்கள்.


மடிப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இன்னும் மின்சாரம் சரியாக வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மரம் விழுந்தது, மின் கம்பங்கள் விழுந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தப் பகுதிகளில் மின்சார இணைப்பை மீண்டும் வழங்குவதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது. அனைத்துத் துறையினரும் தொடர்ந்து அயராமல் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் எந்த இடத்திலாவது தேவையில்லாத தாமதம் நிலவுகிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து வந்துள்ளது.


அதேபோல சென்னை புறநகர்கள் பலவற்றில் இன்னும் வெள்ளம் முறையாக வடியவில்லை. இதற்கு மிக முக்கியக் காரணம் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் மற்றும் உயர்த்திப் போடப்பட்ட சாலைகள் தான் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. அரசு இனியாவது விழித்தெழுந்து ஈவு இரக்கமே பார்க்காமல், கால்வாய் ஆக்கிரமிப்புகளை சரி செய்தால் மட்டுமே சென்னையையும், அதன் புறநகர்களையும் எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் எத்தனை கோடி செலவு செய்தாலும் அத்தனையும் வீணாகத்தான் போகும்.


அரசுகள் வரும் போகும்.. ஆனால் மக்கள் அதே இடத்தில்தான் வசிக்க வேண்டியுள்ளது. எனவே அவர்களின் நிலையை உணர்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் சாதாரண கோரிக்கையாகும்.