சென்னையில் போக்குவரத்து, பால் சப்ளை, குடிநீர் விநியோகம் சீரடைந்தது.. தலைமைச் செயலாளர் தகவல்

Su.tha Arivalagan
Dec 08, 2023,06:18 PM IST

சென்னை: சென்னையில் போக்குவரத்து, பால் விநியோகம், குடிநீர் விநியோகம் முழுமையாக சீரடைந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.


சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து இன்று மாலை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களிடம் விவரித்தார்.


அவர் கூறுகையில், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் சீரடைந்துள்ளது. 0.04 சதவீத அளவுக்கு மட்டுமே மின்விநியோகம் இல்லை. அதுவும் கூட விரைவில் சரியாகி விடும். சென்னையில் பால் சப்ளை சீரடைந்துள்ளது. வழக்கமான அளவில் பால் விநியோகம் மற்றும் விற்பனை நடந்து வருகிறது.




வட சென்னையில் மட்டும் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடிந்து விட்டது.  சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் வடிக்கப்பட்டு விட்டது.


போக்குவரத்து சீரடைந்துள்ளது. நகர் முழுவதும் வழக்கமான அளவில் பஸ்கள் சென்று வருகின்றன.   பஸ் போக்குவரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை முதல் பள்ளி கல்லூரிகள் இயங்கும். அங்கு தண்ணீர் தேங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் தேங்கியிருக்கும் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு விடும். பள்ளி கல்லூரிகளை முழுமையாக சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் சிவ்தாஸ் மீனா.