புத்தம் புதிய டெர்மினல்.. சென்னை ஏர்போர்ட்டின் "கெப்பாசிட்டி" இனி 3 கோடி!

Su.tha Arivalagan
Apr 08, 2023,01:01 PM IST
சென்னை: அதி நவீனமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய டெர்மினல் இதுவரை இல்லாத சிறப்பான வசதிகளுடன் எழில் கொஞ்ச காட்சி அளிக்கிறது.

இந்தியாவின் நான்காவது பெருநகரம் சென்னை. இங்குள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உலகின் அனைத்து முக்கிய நாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிகவும் பிசியான விமான நிலையங்களில் ஒன்றாக சென்னை திகழ்கிறது.



இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் புதிதாக ஒரு அதிநவீன வசதிகளுடன் கூடிய முனையம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் அம்சங்களுடன் கூடியதாக இந்த பன்னாட்டு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

புதிய பன்னாட்டு முனையமானது, 1 லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் இது உருவாகியுள்ளது. புதிய முனையத்தால் ஆண்டுக்கு  3 கோடி பேர் வரை இனி எளிதாக கையாள முடியும்.

உள்ளூர் கலை, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள், மேற்கூரைகள், பக்கவாட்டு சுவர்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. உலகத் தரம் வாய்ந்த வசதிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

புதிய விமான முனையத்தில் 100 அதி நவீன செக் இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் விரைவாக உள்ளே செல்ல வழி பிறந்துள்ளது. காத்திருப்பு மிகப்பெரிதாக இனி இருக்காது.

இதேபோல புதிய விமான நிலையத்தில் 108 இமிகிரேஷன் கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 54 கவண்டர்கள் வருகைக்கும், 54 கவுண்டர்கள் புறப்பாட்டு பகுதிக்கும் என பிரித்து அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் எளிதாக உள்ளே செல்லலலாம் , வெளியேறலாம்.

செக் இன் சமயத்தில் பயணிகள் லக்கேஜை எளிதாக விட்டுச் செல்லும் ஆட்டோமேட்டிக் கியா���்க்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. போர்டிங் பாஸை ஸ்கேன் செய்தால் போதும் லக்கேஜை எளிதாக விட்டு விட்டுச் செல்லலாம். புதிய முனையத்தின் மேற்கூரைகள், கண்கவரும் மோடிப் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் சிறப்பம்சமான கோலங்களும் மேற்கூரைகளை அலங்கரித்துள்ளன.

மொத்தம் ரூ. 1260 கோடி செலவில் புதிய விமான நிலைய முனையமானது அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் அனுபவம் இனிமையாகவும், சுலபமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.