வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

Manjula Devi
Apr 10, 2025,11:27 AM IST

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், சில  பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்க கடலில் உருவான காற்று சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலியால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது.  தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் வெயில் அடித்தாலும், ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 




இந்த நிலையில் வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை நிலவிவரும் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை மாவட்டம் மலைப் பகுதிகள் நீலகிரி, தேனி, தென்காசியில் இன்று  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. 


வெயில் நிலவரம்:


அதே சமயத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.