சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை!

Su.tha Arivalagan
Apr 01, 2023,10:46 AM IST

சென்னை:  சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்வது நிற்காமல் தொடர்கிறது. நேற்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெயர் சச்சின் குமார் ஜெயின். 31 வயதான இவர் வேளச்சேரியில் தங்கி பிஎச்டி படிப்பை தொடர்ந்து வந்தார். அவருடன் தேவ்குஷ், தேவராஜ் ஆகிய மேலும் இரு பிஎச்டி மாணவர்களும் தங்கியிருந்தனர்.



கடந்த 3 மாதமாக இவர்கள் இந்த வீட்டில்தான் தங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல 3 பேரும் ஐஐடிக்கு சென்றுள்ளனர்.  வகுப்பு முடிவதற்கு முன்பாகவே சச்சின் சீக்கிரமே கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டார். பிற்பகலில் வீடு திரும்பிய அவர் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னால் சரியாக படிக்க முடியவில்லை. ஸாரி என்று போட்டுள்ளார். பின்னர் அதை தனது நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவரது ஸ்டேட்டஸைப் பார்த்த தேவ்குஷ் உடனடியாக வீட்டுக்கு விரைந்தார். அங்கு மயக்க நிலையில் சச்சின் கிடக்கவே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வாரங்களுக்கு முன்புதான் 20 வயதான வைப்பு புஷ்பக் ஸ்ரீசாய் என்ற ஆந்திர மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.  ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்டீபன் சன்னி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல இன்னொரு மாணவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். ஐஐடியில் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருவதை அனைவரையும் கவலை அடைய வைத்துள்ளது.