சட்டவிரோத அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்றுங்கள்...சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Manjula Devi
Mar 05, 2024,04:55 PM IST

சென்னை:தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்படும் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற ஒத்துழைப்பு அளிக்கப்படுவதில்லை என்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடி கம்பங்களை நட்டுள்ளதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெடுஞ்சாலைகளில் கொடி கம்பங்கள் நடுவது, பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அரசியல் கட்சிகள், தங்கள் அரசியல் மேடையாக பயன்படுத்துகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.




சென்னை - தடா, கோயம்பேடு - மதுரவாயல் உள்பட மூன்று பகுதிகளில் 40 சட்டவிரோத கொடிகம்பங்கள் உள்ளதாகவும், மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை இடையே  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 சட்டவிரோத கொடிக்கம்பங்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 சட்டவிரோத கொடி கம்பங்களும் இருப்பதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலளித்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. 


இந்த சட்டவிரோத கொடிகம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், சட்டவிரோதமாக அரசியல் கட்சிகள் அமைத்துள்ள கொடி கம்பங்களை அகற்ற தமிழக அரசும், காவல் துறையும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, தமிழக  தலைமைச் செயலாளரை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற ஒத்துழைப்பு அளிப்பதில்லையா என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், நெடுஞ்சாலைகளில் உள்ள சட்டவிரோத கொடி கம்பங்களை அகற்றும்படி உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவற்றை அகற்றாதது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் எச்சரித்தனர்.