கல்யாணமான பெண்களுக்கு வேலை கிடையாது.. பாரபட்சமாக நடந்து கொண்டதா சென்னை ஃபாக்ஸ்கான்?

Su.tha Arivalagan
Jun 27, 2024,05:42 PM IST

சென்னை: சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக வெளியாகியும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக  தமிழ்நாடு அரசிடம், மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் ஐபோன்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. ஐபோன் உதிரி பாகங்களை இணைக்கும் பணி இந்த பாக்ஸ்கான் நிறுவனத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


திருமணமான பெண்களுக்கு வேலை மறுக்கப்படும் விவகாரம் தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 1976 சம ஊதியச் சட்டத்தின் கீழ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்பில் எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்ஸ்கான் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த சர்ச்சை தொடர்பாக ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் இதுவரை விளக்கம் தரவில்லை.  தமிழ்நாடு அரசும் இதுவரை இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.


ராய்ட்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் - திருமணமான பெண்களால் குடும்பப் பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்த நேரிடுவதால் வேலையில் சுணக்கம் ஏற்படும். இதைத் தவிர்க்க பாக்ஸ்கான் நிறுவனம் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதைத் தவிர்க்கிறது. திருமணமான பெண்களை வேலைக்கு எடுத்தால் அடிக்கடி லீவு போடுவார்கள், கர்ப்பம் தரிப்பதால் மருத்துவ விடுமுறை எடுப்பார்கள். நீண்ட விடுப்பில் அவர்கள் போவதால் வேலை பாதிக்கும் என்பதால் திருமணமான பெண்களை வேலையில் அமர்த்துவதில்லை என்று பாக்ஸ்கான் எச்ஆர் தரப்பில் கூறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.