சென்னையில் முன்னெச்சரிக்கை.. பருவ மழைக்கு முன்பாகவே.. இன்று முதல் மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணி!

Manjula Devi
May 22, 2024,04:55 PM IST

சென்னை: பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 33 கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த தூர்வாரும் பணிக்கு ஒரு மண்டலத்திற்கு தலா 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ஒவ்வொரு வருடமும் பருவ மழையை எதிர்கொள்வதற்கு வசதியாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை தூர் வாரும் பணிகளை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் வடகிழக்கு பருவமழை மற்றும் தென் மேற்குப் பருவ மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. 




முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டு இருக்கக்கூடிய நீர்நிலைகள், 33 கால்வாய்கள், மழைநீர் வடிகால் மற்றும் மழைநீர் வடிகால்களை ஒட்டியுள்ள தொட்டிகள் ஆகியவற்றை தூர்வாரும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளுக்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து மனிதர்கள் மூலமாக தூர்வார இயலாத பணிகள் மற்றும் ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகள் ஆகியவற்றை நவீன ரோபாடிக் எந்திரம் மூலம் சீர் செய்யும் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 4000க்கும் மேற்பட்ட சாலைப்  பணியாளர்கள் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


தென் மேற்குப் பருவ மழை மற்றும் வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் இப்போதே தூர்வாரும் பணிகளை தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. ஏனெனில் கடந்த வட கிழக்குப் பருவமழைக் காலத்தின்போது டிசம்பர் மாதத்தில் பெய்த பெரு மழை வெள்ளத்தின் போதுதான் சென்னை நகரம் தடுமாறியது. அதற்கு முன்பு பெய்த மழையின்போது கால்வாய்களில் நீர் வேகமாக வடிந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.  அதற்கு இந்த கால்வாய்களே காரணம் என்று திமுக அரசு தெரிவித்திருந்தது.




இந்த நிலையி்ல கடந்த டிசம்பர் போன்ற நிலை மீண்டும் வந்து விடாமல் தடுக்க இன்று தூர்வாரும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.


பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை, சென்னை மாநகரில் 1480 கி.மீ. நீளத்திற்கு மழைநீர்வடிகால் கட்டமைப்புகளையும், சென்னை மாநகரில் ஓடும் 33 கால்வாய்களையும் பராமரிக்கின்றது.  இந்த மழைநீர் கட்டமைப்பு மற்றும் கால்வாய்களின் வழியாக சென்னையில் ஓடும் நான்கு நீர்வழித்தடங்களான பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு நதி, கூவம் நதி மற்றும் கொசஸ்தலையாறு நதி மூலமாக மழைநீர் கடலில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.