"உதயம் தியேட்டருல என் இதயத்த தொலைச்சேன்".. அந்த தியேட்டரே காணாமல் போகப் போகுதே மச்சான்!

Su.tha Arivalagan
Feb 14, 2024,06:06 PM IST

"உதயம் தியேட்டருல

என் இதயத்த தொலைச்சேன்

அதை தேவி தியேட்டருல

தினம் தேடி தேடி அலைஞ்சேன்"


மறக்க முடியுமா இந்தப் பாட்டை.. ஆனந்தப் பூங்காற்றே படத்தில் தேவா இசையில் வந்த இந்தப் பாட்டு, 90ஸ் கிட்ஸ் மத்தியில் பட்டையைக் கிளப்பிய பாட்டு.. "தல" ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. சென்னை மக்களுக்கும் இது ஒரு வகையில் தேசிய கீதம் போலத்தான்.. காரணம்.. அந்தப் பாட்டில் வரும் முதல் வரியான "உதயம் தியேட்டர்".. பாட்டு முழுக்க ஏகப்பட்ட தியேட்டர்களின் பெயர் வரும்.




சென்னையின் அடையாளங்களில் உதயம் தியேட்டரும் அடக்கம்.  மொத்தம் நான்கு தியேட்டர்கள் இங்கு உள்ளன. அசோக் நகர்,  அசோக் பில்லருக்கு அருகே உள்ள இந்த தியேட்டர் எத்தனையோ வரலாறுகளைச் சுமந்தபடி இத்தனை காலமாக நின்று கொண்டிருந்தது.. இப்போது இந்த வரலாறு அழியப் போகிறது.. ஆமாங்க, உதயம் தியேட்டரை பிரபல கட்டுமான நிறுவனம் வாங்கி விட்டதாம். அந்த இடத்தில் தியேட்டரை இடித்து விட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டப் போகிறார்களாம்.


இதைக் கேள்விப்பட்டது முதலே சென்னை மக்கள் சோகமாக உள்ளனர். சென்னையின் இதயம் போன்ற பகுதியில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் உதயம் தியேட்டர் சாதாரண தியேட்டர் கிடையாது.. அது ஒரு எமோஷன். 


ரஜினிகாந்த், கமல், விஜய், அஜீத்  என பல சூப்பர் ஸ்டார் நடிர்களின் படங்கள் இங்கு திரையிடப்பட்டு பட்டையைக் கிளப்பியுள்ளன. 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமான தியேட்டர்தான் உதயம். நண்பர்கள், காதலர்கள் என பல தரப்பினரும் சந்திக்க அருமையான ஜாயின்ட் போலவும் இது இருந்து வந்தது. இப்போது இந்த தியேட்டரை மூடப் போகிறார்கள்.




சென்னையின் பல அடையாளங்கள் காலத்தின் மாற்றத்தால் கரைந்து மறைந்து போய்க் கொண்டுள்ளன. அந்த வரிசையில் உதயமும் இணைவது.. பலரதை இதயத்தைப் பிசைவதாக உள்ளது. ஆனந்த் தியேட்டர் போய் விட்டது.. சாந்தி போயாச்சு.. ஜெயந்தி, தியாகராஜா போய்ருச்சு.. அண்ணா தியேட்டர் ரொம்ப காலத்துக்கு முன்னாடி காலியாய்ருச்சு. இப்போது உதயமும் அஸ்தமனமாகப் போகிறது.


இதுல என்ன கொடுமைன்னா "உதயம் தியேட்டருல" பாட்டுல  வரும்.. முக்கால்வாசி தியேட்டர்கள் இப்ப இல்லை.. ஒன்னு மூடிட்டாங்க இல்லாட்டி இடிச்சுட்டாங்க.. "காதலர்களின் வேடந்தாங்கலை" இப்படி கேட்டை இழுத்து மூடும் செய்தியை.. காதலர் தினத்தன்று படிக்க கஷ்டமாத்தான் இருக்கு.. இன்னா பண்றது!