சென்னையில்.. பார்ட் பார்ட்டாக வச்சு செய்த திடீர் கன மழை!

Meenakshi
Oct 06, 2023,04:15 PM IST
சென்னை: சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பகுதி பகுதியாக கன மழை வெளுத்தெடுத்ததால் மக்கள் குழம்பிப் போய் விட்டனர். மழை பெய்து ஓய்ந்த இடங்களில் இப்போது சுள்ளென்று வெயில் அடித்து வருவதால் மக்கள் இன்னும் குழப்பமாகி விட்டனர்.

வழக்கமாக சென்னையில் ஏப்ரல் முதல் ஜூன் ஜூலை வரைதான் நல்ல வெயில் அடிக்கும். ஆனால் இந்த முற அக்டோபரிலும் வெயில் வெளுத்தெடுக்கிறது. திடீர் திடீரென மழையும்  பெய்வதால் பல்வேறு பருவ கால நோய்கள் பரவி வருகின்றன.



இந்த நிலையில் சில நாட்களாக ஓய்ந்திருந்த மழை இன்று திடீரென எட்டிப் பார்த்தது. நகரிலும், நகரின் புறநகர்ப் பகுதிகளிலும் விட்டு விட்டு திடீர் கனமழை கொட்டித் தீர்த்தது.   காலையில் சுள்ளென்று அடித்த வெயிலின்  தாக்கம்  குறையும் பொருட்டு மதியமத்திற்கு மேல் நல்ல கனமழை பெய்தது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, தி.நகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ததது. அதேபோல தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதேபோல இன்று முதல் அடுத்த 8 நாட்களுக்கு தமிழகம் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இந்த மழை பொழிவு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக சென்னையில் பகலில் நல்ல வெயிலும், இரவில் மழையும் பெய்து வந்த நிலையில், இன்று சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையில் பகலிலும் கனமழை பெய்தது.