சென்னையிலும், புறநகர்களிலும் டமால் டுமீல் மழை.. காற்று இடியுடன்.. மக்கள் செம ஹேப்பி!

Su.tha Arivalagan
Jul 12, 2024,09:40 PM IST

சென்னை: சென்னையில் இன்று காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் இரவு எட்டரை மணிக்கு மேல் நகரிலும் புறநகர்களிலும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது.


தமிழ்நாட்டில் ஆங்காங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்றைக்கான மழை குறித்து தமிழ்நாடு வெதரமேன் பிரதீப் ஜான் ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்.


 


பகலில் நன்றாக வெயில் அடிக்கும். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு நான் என்ன சொல்லணும்னு உங்களுக்கே தெரியும். இன்று மாலை அல்லது இரவில் வழக்கம் போல ஒரு டமால் டுமீல் காத்திருக்கிறது. இங்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்று பரவலாக நல்ல மழை இருக்கும்.


கேடிசிசி பெல்ட், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை பெல்ட், சேலம் நாமக்கல் ஈரோடு பெல்ட்,  கொடைக்கானல் மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பெல்ட், டெல்டா பெல்ட் ஆகியவற்றில் மழையை எதிர்பார்க்கலாம்.


அதேபோல நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர், கூடலூர்  அவலாஞ்சி மற்றும் வால்பாறையில் பருவ மழை பிக்கப் ஆகும்.  அதேபோல மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவ மழை வலுப்பெற்றுள்ளது.  வரும்நாட்களில் கர்நாடகாவில் காவிரி ஆற்றில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இ்பபோதே கபிணி அணை உபரி நீர் மேட்டூருக்கு வர ஆரம்பித்து விட்டது. மாலையில் மீண்டும் சந்திக்கலாம் என்று கூறியிருந்தார் பிரதீப் ஜான்.


இந்த நிலையில் இரவு எட்டரை மணிக்கு மேல் சென்னையிலும் புறநகர்களிலும் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் காற்றுடனும், இடியுடனும் கன மழையாக இருந்தது. சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழையாக காணப்பட்டது. ராயப்பேட்டை, அண்ணா நகர், ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர்  என பல இடங்களிலும் மழை பெய்ததால் குளுமை குடியேறி மக்கள் ஹேப்பியானார்கள்.