எஸ்கலேக்டரில் விபத்து: வெங்கடேஷ் பட் மகளுக்கு நேர்ந்த ஷாக்!
சென்னை: சென்னை மால் ஒன்றில் எஸ்கலேக்டரில் தன் மகளுக்கு ஏற்பட்ட திடீர் விபத்து குறித்து பிரபல சமையல் கலை வல்லுநர் வெங்கடேஷ் பட் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவால் நெட்டிசன்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெங்கடேஷ் பட் ஒரு சமயல் கலை வல்லுநர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருபவர் செஃப் வெங்கடேஷ் பட். இந்நிகழ்ச்சியில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் எனலாம்.
தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், சென்னையில் உள்ள மால் ஒன்றி்ற்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது எஸ்கலேட்டரை பயன்படுத்திய போது மகளின் காலில் இருந்த செருப்பு எதிர்பாராத விதமாக அதில் மாட்டிக் கொண்டது. நான் உடனே என் மகளை இழுக்கவே எந்தவித ஆபத்தும் இல்லாமல் அவர் தப்பி விட்டார்.
எனது மகள் அணிந்த செருப்புதான் சேதமடைந்து விட்டது. இது ரொம்ப சீரியஸ் விஷயம். இப்படி எல்லாம் நடக்கக் கூடாது. செருப்பில் பாதி உள்ளே இருக்கிறது. குழந்தைகளை வைத்து இருப்பவர்கள் கவனமாக இருங்கள். மிக பாதுகாப்பாக செல்லுங்கள். இதில் உடனே நடவடிக்கை எடுத்து மாற்ற வேண்டும். இது மிகவும் சீரியஸான விஷயம் என்று கூறி விடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் வெங்கடேஷ் பட்.
கொஞ்சம் தவறியிருந்தால் மகளின் காலும் மாட்டியிருக்கும் என கூறி, இதுகுறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய நாகரிகத்தின் அடையாளமாக பல மாற்றங்கள் வந்தாலும், அதிலும் ஆபத்து அதிகம் இருப்பதை பலரும் உணருவதில்லை. மாற்றத்தை ஏற்றுக் கொள்வதோடு மட்டுமில்லாமல் அவற்றை குறித்த அறிவையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் இச்சம்பவம்.