நிலவில் ஜம்மென்று காலூன்றி நின்ற "விக்ரம்" ரோவர்.. அட்டகாசமான புகைப்படம் வெளியானது!

Su.tha Arivalagan
Aug 23, 2023,09:07 PM IST

பெங்களூரு: நிலவை நோக்கி விக்ரம் லேண்டர் தரை இறங்கியபோதும், தரை இறங்கிய பிறகும் எடுக்கப்பட்ட படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.


இந்தப் படங்கள் பார்க்கவே அட்டகாசமாக உள்ளன. குறிப்பாக நிலவின் தரைப்பரப்பில் ஜம்மென்று காலூன்றி நின்று கொண்டு விக்ரம் ரோவர் எடுத்த புகைப்படம் கோடிக்கணக்கான இந்தியர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.




நிலவில் காலடி எடுத்து வைத்த பின்னர் விக்ரம் ரோவர் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளது. நிலவின் தரைப்பரப்பின் ஒரு பகுதி அதில் தெரிகிறது. கூடவே, ரோவரின் ஒரு கால் பகுதி தெரிகிறது. பார்க்கவே புல்லரிப்பை ஏற்படுத்தும் இந்த ஒத்தப் படத்துக்காக மொத்த இந்தியாவும் இத்தனை காலம் தவம் இருந்தது என்றால் அது மிகையில்லை.. மறைந்த விக்ரம் சாராபாய் முதல் அப்துல் கலாம் வரை அத்தனை பேருக்கும் கெளரவம் சேர்த்துக் கொடுத்து விட்டது விக்ரம் ரோவர்.. Simply beautiful!


இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.04 மணியளவில் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விக்ரம், வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. எந்தவித சிக்கலும் இல்லாமல் சூப்பராக விக்ரம் லேண்டர் தரையிறங்கியதை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்சாகத்துடன் கொண்டாடித் தீர்த்தது.




இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் நடக்க ஆரம்பித்துள்ளன. தற்போது லேண்டருக்குள் இருக்கும் பிரக்யான் ரோவர் வெளியே வர வேண்டும். சில மணி நேரங்கள் இதற்குப் பிடிக்கும். அதற்கு முன்பாக லேண்டரிடமிருந்து சில புகைப்படங்கள் வந்து சேர்ந்துள்ளன.


லேண்டர், நிலவின் தரைப்பரப்பை நோக்கி வேகமாக இறங்கி வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இவை. பார்க்கவே ஜோராக இருக்கிறது. நிலவின் தரைப் பகுதி மிகவும் நெருக்கமாக இதில் காணப்படுகின்றன.


நிலவை வென்றது இந்தியா.. சந்திரயான் 3 மாபெரும் வெற்றி.. சூப்பராக இறங்கியது விக்ரம் லேண்டர்!


மேலும், பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும், லேண்டருக்கும் இடையே தகவல் தொடர்பும் வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டு விட்டது. இதையும் இஸ்ரோ அறிவித்துள்ளது. இனி ரோவர் வெளியே வந்ததும் அந்த ரோவரை லேண்டர் புகைப்படம் எடுக்கும். அதேபோல, ரோவர், பதிலுக்கு லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பும். இதன் மூலம் இருவரும் நலமாக இருப்பதை நம்மால் உறுதி செய்ய முடியும்.


அதன் பின்னர் நிலவின் தரைப்பரப்பில் பல்வேறு ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ளவுள்ளது. அதந் மூலம் கிடைக்கும் அரிய தகவல்களை அறிய மொத்த உலகமும் காத்துள்ளன.