நிலவை வென்றது இந்தியா.. சந்திரயான் 3 மாபெரும் வெற்றி.. சூப்பராக இறங்கியது விக்ரம் லேண்டர்!

Su.tha Arivalagan
Aug 23, 2023,11:17 PM IST
பெங்களூரு: நிலவில் கால் பதித்து மாபெரும் வரலாறு படைத்து  விட்டது இந்தியாவின்  சந்திரயான் 3 விண்கலம். விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவில் பத்திரமாக தரையிறங்கி அத்தனை இந்தியர்களையும் உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்தியா ஜூலை14ம்  தேதி தனது சந்திரயான் 3 விண்கலத்தை செலுத்தியது. அதன் பின்னர் இந்த விண்கலமானது நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்து தற்போது நிலவில் கால் பதித்து புதிய வரலாறு படைத்து விட்டது. 



மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில்  இறங்கி இந்தியர்களுக்குப் புதிய பெருமையைத் தேடிக் கொடுத்து விட்டது. படிப்படியாக ஒவ்வொரு கட்டளையையும் விக்ரம் லேண்டர் செயல்படுத்தி திட்டமிட்டபடி தரையிறங்கி அசத்தி விட்டது.

இந்தியாவின் மாபெரும் கனவுத் திட்டம் எந்தவிதமான பிசிறும் இல்லாமல் வெற்றி பெற்றிருப்பது இந்தியர்களை பெருமையிலும்,ஆனந்தக் ககண்ணீரிலும் மூழ்கடித்துள்ளது. மொத்த நாடும் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இதை நேரில் கண்டு களித்து மகிழ்நதார்.




சந்திரயான் 1 திட்டம் நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்து உலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. சந்திரயான் 2 திட்டம் கடைசி நிமிடங்களில் தோல்வியைத் தழுவியது. இதனால் சந்திரயான் 3  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் மிக மிக அருமையாக சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ளது. விக்ரம் லேண்டர் மிக மிக அருமையாக தரையிறங்கியுள்ளது. அடுத்து பிரக்யான் ரோவர் செய்யப் போகும் ஆய்வுகளையும், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களையும் அறிய இந்தியா  மட்டுமல்லாமல் உலகமே காத்துள்ளது.