சந்திரயான் 3 Vs லூனா 25 .. சந்திரனை முதலில் தொடப் போவது யாரு.. ?

Aadmika
Aug 18, 2023,04:39 PM IST
டெல்லி : இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 ஆ அல்லது ரஷ்யா அனுப்பி உள்ள லூனா 25 ஆ எது முதலில் நிலவில் வெற்றிகரமாக இறங்கப் போகிறது என்பதில் இந்தியா - ரஷ்யா இடையே நிலவில் செம போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி உள்ளது. அது வெற்றிகரமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி வருகிறது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக தனியாக பிரிந்து சென்றுள்ளது. 

அடுத்த கட்டமாக நிலவின் தரைப்பரப்பை அடைந்து, வெற்றிகரமாக நிலவில் நிலைநிறுத்தப்பட வேண்டும். இது ஆகஸ்ட் 23 ம் தேதி நடைபெறும் என்பதால் உலகமே சந்திரானின் இயக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வது இந்தியாவின் கனவு திட்டம் மட்டுமல்ல, இதுவரை வேறு எந்த நாடும் செய்யாத முயற்சியாகும்.

இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் நிலவை குறிவைத்து ஆய்வுகள் நடத்தி வருகின்றன. சந்தியரான் 3 உடன் ரஷ்யா அனுப்பி உள்ள லூனா 25 விண்கலமும் தற்போது நிலவின் நீள்வட்ட பாதையில் பயணம் செய்து வருகிறது. ஆனால் இந்த இரு நாடுகளில் எந்த நாடு முதலில் நிலவை வெற்றிகரமாக அடைய போகிறது என்பத தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. சந்திரயான் 3 தான் முதலில் நிலவின் தரைப்பரப்பை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லூனா 25 விண்கலம் ஆகஸ்ட் 21 முதல் 23 க்குள் நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் சந்திரயான் 3 ஆகஸ்ட் 23  முதல் 24 ல் தான் தரையிறக்க திட்டமிட்டுள்ளது. இதனால் நிலவை நெருங்கும் இந்த போட்டியில் முந்தப் போவது இந்தியாவா? ரஷ்யாவா? என உலக நாடுகள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் இந்த விண்கலன்களின் பாதைகளும் வேறு, இவைகள் இரண்டும் நிலவை ஒரே சமயத்தில் அடைந்தாலும் இவற்றின் பணிகளும் வேறு.

1976 ம் ஆண்டிற்கு பிறகு 50 ஆண்டுகள் கழித்து தற்போது தான் முால் முறையாக ரஷ்யா நிலவிற்கு விண்கலத்தை அனுப்பி உள்ளது. லூனா 25 லேசான எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தால் 1759 கிலோ எடையை தான் தாங்கிச் செல்ல முடியும். ஆனால் சந்திரயான் 3 விண்கலமானது 3,800 கிலோ வரை தாங்கிச் செல்லக் கூடிய தன்மை கொண்டதாகும்.