தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு.. மீண்டும் பஸ் போக்குவரத்து தொடக்கம்

Meenakshi
Sep 09, 2023,10:21 AM IST
விஜயவாடா: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதைத் தொடர்ந்து ஆந்திரா முழுவதும் பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது பஸ்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும்,  தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் இன்று காலை கைது மெய்யப்பட்டுள்ளார். திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஏ-1 பிரிவில் ரூ. 250 கோடி வரை ஊழல் செய்ததாக அவர் மீது சிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்று திடீரென சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

அவரது கைதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டங்களில்  குதித்துள்ளனர். பல ஊர்களில் வன்முறை வெடித்துள்ளது. சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ் போக்குவரத்தைத் தடுத்தும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக பல ஊர்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்திருந்தனர்.

பஸ் போக்குவரத்து தொடங்கியது

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகளும், ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு வரும் பேருந்துகளும் எல்லையிலே நிறுத்தப்பட்டன. சந்திரபாபு கைதை முன்னிட்டு ஆந்திரா 
முழுவதிலும் பதற்றம் நிலவுவதால் போலீஸார் பாதுகாப்பை  பல மடங்கு அதிகரித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் பதட்டம் தணிந்திருப்பதால் வேலூர், சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலையை அடைந்துள்ளது.

சமீப காலமாகவே சந்திரபாபு நாயுடுவுக்கும், முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் உள்ளது. தொடர்ந்து இரு தரப்பும் பரஸ்பரம் அனல் பறக்க மோதிக் கொண்டு வருகின்றனர். சந்திரபாபு நாயுடுவின் கூட்டங்களில் அடுத்தடுத்து வன்முறைகளும் வெடித்தன என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.