எடுத்த சபதம் முடித்த சந்திரபாபு நாயுடு.. 4வது முறையாக ஆந்திர முதல்வராகிறார்.. ஜூன் 9ல் பதவியேற்பு?

Meenakshi
Jun 04, 2024,03:21 PM IST

அமராவதி:  ஆந்திர மாநில  சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி முன்னிலையில் உள்ளது. அங்கு ஆட்சியையும் பிடிக்கிறது. இந்நிலையில், ஜூன் 9ம் தேதி முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


1970ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் சந்திரபாபு நாயுடு. அதன்பின்னர் 1978ல் சந்திரகிரி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றார். பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடமே தோல்வி அடைந்தார். அதன் பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரானார். 1989ல்  தெலுங்கு தேசம் எம்எல்ஏவாக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1999ல் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார்.




8 முறை எம்எல்ஏவாகவும், 3 முறை முதல்வராகவும் இருந்துள்ளார் சந்திரபாபு நாயுடு. மேலும் தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளராகவும் தேசிய அரசியலில் ஈடுபட்டார். பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் முக்கியப் பங்காற்றினார். கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு கடந்த 2019ல் நடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். 


கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த முறை வெற்றி பெற்றுள்ளார். 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி 137 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 16 லோக்சபா தொகுதிகளிலும் தெலுங்குதேசம் வெல்லும் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜூன் 9ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இவரது வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில சட்டசபையில் அவமதிக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு. இதனால் அழுதபடி வெளியே வந்த  அவர் முதல்வராகத்தான் இனி சட்டசபையில் நுழைவேன் என்று சவால் விட்டிருந்தார். தற்போது முதல்வராக சட்டசபைக்குள் சென்று தனது சபதத்தை நிறைவேற்றவுள்ளார்.