ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு, துணை முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்பு!

Meenakshi
Jun 12, 2024,05:18 PM IST

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.


மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் நேற்று விஜயவாடாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 162 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். தெலுங்கு தேசம் கூட்டணியின் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆந்திர ஆளுநர் நசீர் அகமதிடம் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி மற்றும் தெலுங்குதேசம்,ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் வழங்கினர். அதன் பின்னர் சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுக்கும்படி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.





இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்த பதவி ஏற்பு விழாவிற்காக, விஜயவாடா விமான நிலையம் அருகே உள்ள கேசரபல்லி என்னும்  இடத்தில் பிரம்மாண்ட அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், நடிகர் பாலகிருஷ்ணா, சந்திரபாபு நாயுடு மகன் நர லோகேஷ் உட்பட பலர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பவன் கல்யாண் துணை முதல்வராகிறார்.


இவ்விழாவிற்கு  சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள்  கலந்து கொண்டனர்.  மேலும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.


அதே போல ஒடிசா மாநில முதலமைச்சராக மோகன் மஜி இன்று பதவியேற்க உள்ளார். புவனேஸ்வரில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஒடிசா மாநிலத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.