தமிழகத்தில்.. இன்றும், நாளையும்.. மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Manjula Devi
Jun 05, 2024,01:16 PM IST

சென்னை:   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன்,  பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி எடுத்து வந்தது. இதனால் மக்கள் புலம்பித் தவித்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த  சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் ஒரு சில இடங்களில் மழை பெய்தும் வருகிறது. இதனால் தற்போது வெக்கை சற்று தணிந்து குளுமை நிலவி வருகிறது.  




தெற்கு ஆந்திரா- வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென் தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதனால் தெற்கு வங்க கடலில் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வெப்பநிலையை பொறுத்தவரை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும், ஒரு சில இடங்களில் இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மிக மூட்டத்துடன் காணப்படும்.


நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெடுங்கல்லில் 13 சென்டிமீட்டர் மழை பதிவானது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் 11 செண்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. 


சிறுகனூர், நாட்றாம்பள்ளி, பாரூர் கொளப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழையும், பெனுகொண்டாபுரம், போச்சம்பள்ளி, ரெட் ஹில்ஸ், ஆகிய இடங்களில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.