கோடையிலும் குளுமை... 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Meenakshi
Mar 23, 2024,11:54 AM IST

சென்னை:தமிழகத்தில் 13  மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


கோடைகாலத்திற்கு முன்னரே வெளுத்து வாங்கி வருகிறது வெயில். இந்த வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வெளியில் தலை காட்ட முடியவில்லை. பல ஊர்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டு வெளுத்தெடுக்கிறது. இந்த நிலையில், கடுமையான வெயிலில்  இருந்து மக்கள் 3 நாட்களுக்கு தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்து.அதைப்போலவே தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் நல்ல மழை பெய்து வருகிறது.




இந்நிலையில், 13 மாவட்டங்களில் இன்றும்  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது.தென் மாநிலங்களில் இன்று மிதமான மழை பெய்யும், நாளை முதல் வரும் 28ம் தேதி வரை,தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.