அப்பாடா... 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு .. வானிலை மையம் தகவல்

Meenakshi
Apr 11, 2024,04:09 PM IST

சென்னை: தமிழகத்தில் தற்பொழுது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து 6 நாட்களுக்கு தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கடந்த சில நாட்களாக வெயில் தனது உக்கிர தாண்டவத்தை காண்பித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டி பொதுமக்களை கடுப்பேத்தி வருகிறது. வெளியில் போகவே மக்கள் யோசிக்கும் அளவிற்கு வெயில் மண்டையை பிளக்கும் அளவிற்கு அடித்து வருகிறது. இதில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். இந்நிலையில், இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.




இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ அடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


ஏப்ரல் 12 நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 13 நாளை மறுநாள் தென்தமிழகத்தி்ல் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


ஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தில்ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 17 ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியறஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.