ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்தலாம்.. மத்திய அரசு தகவல்

Su.tha Arivalagan
Aug 31, 2023,01:23 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்தலாம். ஆனால் அது தொடர்பான இறுதி முடிவை மத்திய தேர்தல் ஆணையமும், மாநில தலைமைத் தேர்தல் அலுவலகமும்தான் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தத் தகவலை அது சுப்ரீம் கோர்ட்டில் இன்று தெரிவித்தது. 


தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு ஆஜராகி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்தத் தகவலை தெரிவித்தார்.  மூன்று கட்டங்களாக ஜம்மு காஷ்மீருக்குத் தேர்தல் நடத்தப்படும். முதலில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும். அடுத்து நகராட்சித் தேர்தல். அதைத் தொடர்ந்து கடைசியாக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்றார்.




ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. முன்னதாக மாநிலப் பிரிவினை குறித்து சுப்ரீம் கோர்ட் நிறைய கேள்விகளை எழுப்பியிருந்தது. இதனால் நீண்ட கால பலன் இல்லை என்றும் அது கூறியிருந்தது.


இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் வாதிடுகையில், மாநிலப் பிரிவினைக்கான அவசியம் இருந்ததால்தான் அது செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தது.  அப்போது குறுக்கிட்ட  தலைமை நீதிபதி ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் திரும்ப வேண்டியது அவசியம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் கடந்த 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் திணறி வருவதாக தெரிவித்திருந்தனர்.


இந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது தேர்தல்  குறித்து தெரிவித்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது கொடுக்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை அளிக்க மறுத்து விட்டது.