Happy Diwali Guys: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

Aadmika
Oct 16, 2024,03:23 PM IST

டில்லி : மத்திய அரசு ஊழியர்கள், பென்சன்தாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர உள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பான தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி மாற்றி அமைப்பது வழக்கம். இது மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படுவது வழக்கம். தற்போது தீபாவளி நெருங்கும் சமயத்தில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. 




அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டால் ஆரம்ப நிலையில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் உயர வாய்ப்புள்ளது. அதாவது ரூ.18,000 மாத சம்பளம் பெறுபவர்களின் சம்பளத் தொகையில் ரூ.540 உயர வாய்ப்புள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்கள் இதனால் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு சேர்த்து கணக்கிட்டு அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்பட உள்ளது.


மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தீபாவளி போனசாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் சலுகைகள் அதிகரிக்கப்பட்டு வருவது, அரசு ஊழியர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ரயில்வே துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஓய்வுபெற்ற ஊழியர்களைக் கொண்டு நிரப்ப மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மற்ற துறைகளிலும் இது போல் நிரப்பும் பணி நடைபெற்றால் அது பலருக்கும் உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்