தேர்தல் ஆணையர்கள் நியமனம்.. தேர்வுக் குழுவில்.. தலைமை நீதிபதி இடமில்லை!

Su.tha Arivalagan
Aug 10, 2023,02:37 PM IST
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு ஆணையர்களை நியமனம் செய்யும் தேர்வுக் குழுவில் பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒரு கேபினட் அமைச்சர் ஆகியோரை மட்டும் மத்திய அரசு சேர்த்துள்ளது. இந்தக் குழுவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு இடம் அளிக்கப்படவில்லை. 

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்ட மசோதா 2023-ஐ மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  தலைமைத் தேர்தல் ஆணையரையும், இதர ஆணையர்களையும் தேர்வு செய்ய பரிந்துரைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒரு கேபினட் அமைச்சர் ஆகியோர் இருப்பார்கள். இந்தக் குழு பரிந்துரைப்போரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்து அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த மசோதா புதிய சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தவுள்ளது. காரணம், சமீபத்தில் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், தலைமைத் தேர்தல் ஆணையரையும், பிற தேர்தல் ஆணையர்களையும் நியமிக்க பரிந்துரைக் குழு அமைக்கப்பட வேண்டும். அதில் பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு புறம் தள்ளிவிட்டு,அதாவது தலைமை நீதிபதியை குழுவில் சேர்க்காமல், கேபினட் அமைச்சரை சேர்த்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதேபோலத்தான் டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத் திருத்த மசோதாவிலும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை மத்திய அரசு சேர்க்காமல் புறக்கணித்தது என்பது நினைவிருக்கலாம். இப்படி அடுத்தடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மத்திய அரசு புறக்கணித்திருப்பது புதிய மோதலுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.