குடியுரிமை திருத்தச் சட்டம் ( CAA) அமலுக்கு வந்தது.. அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு!

Su.tha Arivalagan
Mar 11, 2024,06:43 PM IST

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம்  கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


சிஏஏ சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் அதிமுக உள்ளிட்ட பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வாக்களித்தன. நாடு முழுவதும் இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக முஸ்லீம்கள் கடும் போராட்டம் நடத்தினர் என்பது நினைவிருக்கலாம்.


சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், பலர் உயிரிழந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த சட்டத்தின் மூலம் 2015ம் ஆண்டுக்கு முன்பே இந்தியாவுக்கு அகதிகளாக வந்த, முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி செய்கிறது. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு மட்டும் இது பொருந்தும்.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


சிஏஏ சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:


- வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இந்துக்கள், ஜைனர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சி இனத்தவர், 2015ம் ஆண்டுக்கு முன்பே அகதிகளாக வந்திருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.


- கடந்த 14 ஆண்டுகளில் இந்தியாவில் குடிபுகுந்து ஒரு வருடம் வசித்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். (முன்பு 11 வருடங்கள் இந்தியாவில் வசித்திருந்தால்தான் குடியுரிமை வழங்கப்படும்)


- அஸ்ஸாம், மேகாலயா, மிஸோரம், திரிபுரா  மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின பகுதிகளுக்கு இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் அஸ்ஸாம் மாநிலத்தின் கர்பி பழங்குடியின பகுதி, மேகாலயாவில் காரோ மலைப் பகுதி, மிஸோரமில் உள்ள சக்மா மாவட்டம், திரிபுராவில் உள்ள பழங்குடியினப் பகுதிகள் இடம் பெற்றுள்ளன.