மோடி, அமித் ஷாதான் முடிவெடுப்பார்கள்.. அண்ணாமலைக்கு பவர் கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Apr 03, 2023,11:26 AM IST
சேலம்:  கூட்டணி குறித்து மத்தியில் உள்ள தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள். மாநிலத்தில் உள்ளவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அதிமுக - பாஜக  கூட்டணி தொடர்பாக பெரும் குழப்ப நிலை நிலவுகிறது. இதற்குக் காரணம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனித்துப் போட்டியிட விரும்புவதாக பேசியதால். இந்தப் பேச்சை பாஜகவினரே கூட ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவினரும் அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அதுகுறித்து நேற்றுசெய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடன் கூட்டணி இல்லை  என்று அமித் ஷா இறுதியாக அறிவிக்கவில்லை. கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவெடுப்பார்கள். அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்டுக் கொள்வோம் என்று மீண்டும் அதிமுகவை சீண்டும் வகையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,  தேசியத் தலைவர்களான நரேந்திர மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர்தான் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள். சில ஆலோசனைகளையும் கொடுத்துள்ளனர். மத்தியில் உள்ள தலைவர்கள்தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்று கூறியுள்ளனர்.

நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். கூட்டணி குறித்து மத்தியில் உள்ள தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்று அழுத்தம் திருத்தமாக பதிலளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.