"லஞ்சம் வாங்கிய சென்சார் போர்டு".. விஷால் புகார்.. விசாரணைக்கு உத்தரவு!

Meenakshi
Sep 29, 2023,04:54 PM IST

சென்னை: அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில்  சென்சார் போர்டு மீதே புகார் அளிக்கும் நிலை வந்துள்ளது. லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் ஆதாரங்களுடன்  மும்பை சென்சார் போர்டு மீது புகார் அளித்துள்ளார். அதனை உடனடியாக விசாரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி என்ற  திரைப்படம் தமிழில் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்ததினால் ரூபாய் 60 கோடிக்கு மேல் வசூலித்தது. 




இப்படம் இந்தியில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தை இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டுக்கு 2 தவனைகளில் ரூபாய் 6.5 லட்சம்  தன்னிடம் இருந்து லஞ்சமாக அதிகாரிகள் பெற்றதாக இணையதளத்தில் வீடியோ ஒன்றை விஷால் வெளியிட்டு, மத்திய அரசிடம் விசாரணைக்கு கோரியிருந்தார்.


இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வெளியிட்ட வீடியோவில், மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட மும்பையில் உள்ள சென்சார் போர்டை அணுகியபோது, அங்குள்ள அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டதாகவும், தானும் வேறு  வழியின்றி  அதனை 2 தவணைகளிலில் ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சமும் வங்கி கணக்கில் இருந்து அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.


நிஜ வாழ்க்கையிலும் இது போன்று நடப்பதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், தான் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரம் குறித்த தகவல்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் விசாரணைக்கும் கோரிக்கை வைத்திருந்தார்.


இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் மும்பை சென்று சென்சார் போர்டு அதிகாரிகளிடம் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தவுள்ளார்.