இனி ஆல் பாஸ் கிடையாது.. 5, 8ம் வகுப்புகளுக்கு.. மத்திய அரசு அறிவிப்பு.. முடிச்சு விட்டீங்க போல!
டெல்லி: மத்திய அரசு நடத்தி வரும் பள்ளிகளில் தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இனிமேல் தேர்வுகளில் வெற்றி பெற்றால்தான் 6 மற்றும் 9 ம் வகுப்புகளுக்குத் தகுதி பெற முடியும்.
அதேசமயம், எந்த ஒரு மாணவ மாணவியும் அவர்களது தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை பள்ளியை விட்டு அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு நடத்தி வரும் 3000 பள்ளிகளில் இந்த புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்வு முறை ஏற்கனவே அமலில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த பிறகு பெரும்பாலான பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த புதிய முறைக்கு மாறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
5 மற்றும் 8ம் வகுப்புகளில் இனி வருடாந்திரத் தேர்வுகளில் தோல்வி அடைவோர் அடுத்த வகுப்புகளுக்கு முன்னேற முடியாது தோல்வி அடைபவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து அடுத்த 2 மாதங்களில் அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி அடைந்தால்தான் அடுத்த வகுப்புகளுக்கு முன்னேற முடியும்.
அதேசமயம் மறு தேர்விலும் தோல்வி அடைந்தால் மீண்டும் அவர்கள் 5 மற்றும் 8ம் வகுப்பிலேயே தொடர்வார்கள். அவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கூடுதல் வழி காட்டுதல் கொடுக்கப்படும்.
மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரியா வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகளில் இந்த புதிய முறை அமல்படுத்தப்படும். பள்ளிக் கல்வித்துறை மாநில திட்டத்தின் கீழ் வருவதால் மாநிலப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதை மாநில அரசுகளின் முடிவுக்கே விடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்