நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்.. மத்திய அரசே ஒத்துக்குச்சு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Meenakshi
Sep 21, 2023,05:11 PM IST
சென்னை: நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி மற்றும் எம்.எஸ். டிப்ளமா மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பான எம்.டி.எஸ். படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகளவில் காலியாக உள்ளது. இதனால் நீட்தேர்வில் மதிப்பெண் பூஜ்ஜியமாக இருந்தாலும் கலந்து கொள்ளலாம் என மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. 



இந்த அறிவிப்பால் மாணவர்களும் , பெற்றோர்களும்  வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு பல கட்சி தலைவர்களும் பாஜகவிற்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கட்ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதன் மூலம் நீட் தேர்வு தேவையற்றது என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான தேர்வாக மாறிவிட்டது. நீட் தேர்வு மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும்.

இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். இரக்கமே இல்லாமல் பல உயிர்களை பலிவாக்கி விட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள். நீட் என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பாஜக ஆட்சியை அகற்றியாக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.