மராத்தி, பெங்காலி உள்பட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து.. வழங்கியது மத்திய அரசு

Manjula Devi
Oct 04, 2024,01:33 PM IST

டெல்லி:   தமிழ் உள்ளிட்ட 6 இந்திய மொழிகளுக்கு ஏற்கனவே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 மொழிகளுக்கு அந்த அந்தஸ்து தரப்பட்டுள்ளது.


இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அதில் 2001 ஆம் ஆண்டு கணக்கின்படி 29 மொழிகளை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் 122 மொழிகளை அதிகமான மக்கள் பேசுகின்றனர். இந்தி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, போன்ற மொழிகள் வட மாநிலங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், போன்ற மொழிகள் தென்னிந்திய மக்களால் பேசப்பட்டு வருகிறது. இந்த மொழிகள் தென்னிந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது.




இந்திய மொழிகளிலேயே மிகவும் பழமையான தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தர வேண்டும் என்று மறைந்த கலைஞர் கருணாநிதி காலத்தில் தீவிரமாக எடுத்த முயற்சியின் விளைவாக  அப்போதைய காங்கிரஸ் அரசு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. அதைத் தொடர்ந்து சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கும் படிப்படியாக செம்மொழி அந்தஸ்து தரப்பட்டது. தற்போது மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட்டுள்ளது.


அக்டோபர் 3ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்ட்டது. இந்திய மொழிகளை பாதுகாத்து மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.  மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி என மேலும் ஐந்து மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது மத்திய அரசு.


மராத்தி மொழி மகாராஷ்டிராவின் பெரும்பான்மை மொழியாகும். விரைவில் மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மராத்தி மொழி பேசுவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்